திருக்குறளில்
நன்று
(நல்லது எது)
அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: இல்வாழ்க்கை:
குறள் எண்: 49
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
அறவழியில் வாழும் வாழ்க்கையே சிறந்த இல்வாழ்க்கை. அதுவும் பிறர் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல், குற்றமில்லாத வாழ்க்கையாக அமையுமானால் அதுவே மேலும் சிறப்பையும், பெருமையையும் தரும்.
💛💛💛
அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: செய்ந்நன்றியறிதல்:
குறள் எண்: 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
வாழ்க்கையில் நமக்குப் பலர் பலவிதத்தில் பல நன்மைகளைச் செய்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் செய்த நன்மையை எக்காலத்திலும் மறக்காமல் நன்றியுடனிருக்க வேண்டும். அப்படி நன்மை செய்தவர்களிடம் நன்றியில்லாமல் இருப்பது நல்லதல்ல. அதேசமயம் நன்மை செய்தவர்கள் சிறு தீமை செய்தாலும் அத்தீமையை அன்றே, அப்பொழுதே மறந்து விடுவதே நன்றியுடைய செயலாகும்.
அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: பொறையுடைமை:
குறள் எண்: 152
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று
மற்றவர்கள் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தீமைகளை நினைவில் கூட வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி உடனே மறந்து விடுவது துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதை விடச் சிறந்த செயலாகும்.
💛💛💛
அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: பொறையுடைமை:
குறள் எண்: 157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று
ஒருவரின் தகுதிக்குக் குறைவான இழிவான காரியங்களைப் பிறர் செய்த போதிலும் அதனால் வரும் துன்பங்களுக்காக மனம் வருந்தி பழிக்குப் பழிவாங்காமல் இருப்பது நல்லது. அதுவே உயர்ந்த பண்பாகும்.
💛💛💛
அறத்துப்பால்: இல்லறவியல்:அதிகாரம்: பயனில சொல்லாமை:
குறள் எண்: 197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
கற்றறிந்த சான்றோர்களும், அறிஞர்களும் இனிமையான சொற்களையோ, அல்லது நீதியோடு சேராத சொற்களைப் பேசினாலும் பேசலாம். ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது.
💛💛💛
அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: ஈகை:
குறள் எண்: 222
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று
மற்றவர்களிடமிருந்து நல்ல வழியில் பொருள் பெற்றுக்கொள்வது சரியென்றாலும் அது பெருமையுடைய செயலாகாது, தீமையான செயலாகும். பிறருக்குக் கொடுத்து உதவுவதால் மேலுலகம் அதாவது சொர்க்கம் கிடைக்காது என்றாலும் பிறருக்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த செயலாகும்.
💛💛💛
அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: புகழ்:
குறள் எண்: 236
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
ஒரு குறிப்பிட்ட செயலில் அல்லது துறையில் ஈடுபட்டால் அத்துறையில் புகழ்பெற்று விளங்க வேண்டும். அப்படிப்பட்ட புகழை அடைய விரும்பாதவர்கள் அந்தச் செயலிலோ அல்லது துறையிலோ ஈடுபடாமல் இருப்பது நல்லது.
💛💛💛
அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: புலால் மறுத்தல்:
குறள் எண்: 259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலி கொடுத்து ஆயிரம் வேள்விகள் அல்லது யாகங்கள் செய்வதைவிட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நல்லது.
💛💛💛
அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: வாய்மை:
குறள் எண்: 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
பொய் சொல்லாமல் வாழ்ந்தாலே போதும். செய்யக்கூடாததைச் செய்யாததால் வரும் நன்மை மற்றும் புகழை விடப் பொய் சொல்லாமல் வாழ்ந்தால் வாழ்க்கையில் எல்லாச் சிறப்புகளும் கிடைக்கும்.
💛💛💛
அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: வெகுளாமை:
குறள் எண்: 308
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
பல சுடர்களோடு கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு நம்மைச் சூழ்ந்து கொண்டால் வரும் துன்பத்தைப் போல தீராத கொடிய துன்பங்களை ஒருவன் நமக்குக் கொடுப்பானேயானால் முடிந்தவரை அவன் மீது கோபம் கொள்ளாமலிருப்பதே நல்லது.
💛💛💛
அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: கொல்லாமை:
குறள் எண்: 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
எல்லா அறங்களிலும் முதன்மையாக இருப்பது பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது. அதற்குப்பின் சிறந்த அறமாகக் கருதப்படுவது பொய்யாமை அல்லது பொய் சொல்லாது இருத்தல்.
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: வினைத் தூய்மை:
குறள் எண்: 655
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று
தெரிந்தோ தெரியாமலோ தவறான காரியங்களைச் செய்துவிட்டு பின் வருத்தப்படுவதால் எந்தப் பயனுமில்லை. ஆகவே பின்னர் வருத்தப்படும்படியான காரியங்களை மீண்டும் செய்யாமல் இருப்பது நல்லது.
💛💛💛
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: தீ நட்பு:
குறள் எண்: 815
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
எவ்வளவுதான் கொடுத்து பல வகையில் உதவி செய்தாலும் நம்மிடம் உண்மையாகவும் நமக்குப் பாதுகாப்பாகவும் இருக்காத அற்ப மனிதர்களின் நட்பு இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நன்மை தருவதாகும்.
💛💛💛
பொருட்பால்: ஒழிபியல்: அதிகாரம்: மானம்:
குறள் எண்: 967
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
ஒருவன் தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று மரியாதை இழந்து வாழ்வதைவிட அவ்வாறு செய்யாத நிலையில் தன்மானத்துடன் வாழ்ந்து உயிர் விடுவதே நன்று.