திருக்குறளில்
நட்பு
👫👬👬👬👬👬👬👬👬
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நட்பு:
குறள் எண்: 790
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு
நண்பர்கள் இவர் எனக்கு இப்படிப்பட்டவர், இவர் எனக்கு இத்தகைய தன்மையுடையவர் என்று செயற்கையாகப் பேசுவதால் அந்த நட்பின் சிறப்புக் குறைந்துவிடும்.
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நட்பு:
குறள் எண்: 788
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
அணிந்திருக்கும் ஆடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் சரி செய்ய உதவுகிறதோ அதுபோல நண்பர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்க உடனடியாகச் செயல்பட்டு சரி செய்ய உதவுவது சிறந்த நட்பாகும்.
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நட்பாராய்தல்:
குறள் எண்: 798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
ஒருவருடைய ஊக்கம் குறைவதற்கான, அல்லது ஊக்கத்தைச் சிதைக்கக் கூடிய சிந்தனையுடையவரும், துன்பம் வரும் காலத்தில் உதவி செய்யாமல் விலகிவிடும் நபர்களின் நட்பைத் தொடரக் கூடாது.
அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: செய்ந்நன்றியறிதல்:
குறள் எண்: 107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு
துன்பம் வந்த காலத்தில் துயர் துடைப்பவர் நட்பை ஏழேழு பிறவி எடுத்தாலும் எல்லாப் பிறவியிலும் நினைத்துப் போற்றுவதே சிறந்த பண்பு.
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: பழைமை:
குறள் எண்: 801
பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
பழைமை என்றால் என்ன? நெடு நாட்களாக நண்பர்களாக இருந்து பழகிய நட்பின் அடிப்படையில் நம் மீது உரிமை எடுத்துக் கொண்டு ஏதேனும் தவறு செய்து விட்டாலும் அதை பொருட்படுத்தாமல் நெடுங்காலமாகக் கொண்ட நட்புறவை அழியாமல் பாதுகாத்துக் கொள்வது பழைமை எனப்படும்.
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: கூடா நட்பு:
குறள் எண்: 821
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
மனதார உள்ளன்புடன் நட்புச் செய்யாமல் வெளித்தோற்றத்திற்கு நண்பரைப் போல் பழகுபவர்கள் சந்தர்ப்பம் வரும்போது கேடு செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நட்பு எப்படிப்பட்டது என்றால் கொல்லன் பட்டறையில் உள்ள இரும்பைத் துண்டாக்குவதற்குப் பயன்படும் பட்டடைக்கல்லுக்கு ஒப்பாகும்.
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நட்பாராய்தல்:
குறள் எண்: 793
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு
ஒருவருடன் நட்புக் கொள்வதற்குமுன் அவருடைய குணம், குடிப்பிறப்பு, குற்றப்பின்னணி, சிறந்த இயல்புகள், அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
காமத்துப்பால்: களவியல்: அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்:
குறள் எண்:1122
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு
ஒருவருடனான நட்பு எப்படி இருக்க வேண்டும் என்றால் உடம்புக்கும் அதை இயக்கும் உயிருக்கும் என்ன தொடர்போ அத்தகைய தன்மையுள்ளதுதான் சிறந்த நட்பு.
அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: நிலையாமை:
குறள் எண்: 338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு
பறவைக்கும் அது வாழும் கூட்டுக்கும் உள்ள உறவு எப்படியோ அதுபோல உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு போன்றது நட்பு.
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நட்பாராய்தல்:
குறள் எண்: 794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
எவர் ஒருவர் உயர் குடியில் பிறந்து தன் மீது பழி வந்து விடக்கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பைக் கொண்டிருக்கிறாரோ அப்படிப்பட்டவரின் நட்பை சில பொருட்களைக் கொடுத்தாவது பெற்றுக் கொள்ள வேண்டும்.
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நட்பு:
குறள் எண்: 786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
மனதில் உள்ளன்பில்லாமல் பார்த்த போது மட்டும் முகம் மலர நட்புக் கொள்வது சிறந்த நட்பல்ல. ஒருவரின் நெஞ்சமும் மலர உள்ளன்புடன் நட்பு பாராட்டுவது சிறந்த நட்புக்கு அடையாளம்.
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நட்பு:
குறள் எண்: 782
நிறைநீர நீரவர் பிறைமதிப் பின்னரே
பின்னீர பேதையார் நட்பு
அறிவுடையவர்களிடம் கொள்ளும் நட்பு பிறை நிலா போல் தொடங்கி முழுநிலா வளர்வது போல் வளரும். அறிவில்லாதவர்களிடம் கொள்ளும் நட்பு முழுமதி தேய்ந்து தேய்பிறையாகக் குறைந்து மறைவது போல மறைந்து முடிந்துவிடும்.
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நட்பாராய்தல்:
குறள் எண்: 800
மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
ஒருவுக ஒப்பிலார் நட்பு
மனதில் உள்ளன்போடு உண்மையாக இருந்து குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களின் நட்பைத் தேடிப் பிடித்தாவது ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் மற்றும் யதார்த்த எண்ணமில்லாதவர்களின் நட்பை என்ன விலை கொடுத்தாவது ஒதுக்கிவிட வேண்டும்.
பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நட்பு:
குறள் எண்: 787
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
அழிவைத்தரும் தீமைகளிலிருந்து தடுத்து, நல்ல வழியில் நடக்கச் செய்து, துன்பம் வரும் காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே சிறந்த நட்பாகும்.
அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: செய்ந்நன்றியறிதல்:
குறள் எண்: 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
குற்றமற்றவர்களிடம் கொள்ளும் நட்பையும், துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் நின்று உதவியவர்களின் நட்பையும் எப்போதும் விட்டுவிடக் கூடாது.