Search This Blog

Saturday, May 7, 2022

திருக்குறளில் நோய்



 திருக்குறளில்
நோய்


காமத்துப்பால்: கற்பியல்: அதிகாரம்: பொழுதுகண்டு இரங்கல்: 
குறள் எண்:1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்

காதல் நோய் என்பது காலையில் அரும்பாக இருந்து பகலெல்லாம் முதிர்ந்து வளர்ந்து மாலையில் மலர்ந்துவிடும் நோயாகும்.

                                                            💘💘💘💘💘


பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: இகல்: 
குறள் எண்: 851

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்

மாறுபட்ட எண்ணங்களால் ஏற்படும் பகை உணர்வு என்னும் கொடிய நோய் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி வாழாத தீமையான குணங்களை வளர்க்கும்.

                                                            💘💘💘💘💘


பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: அறிவுடைமை: 
குறள் எண்: 429

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

வாழ்க்கையில் வரப்போகும் துன்பங்களை முன்னதாகவே அறிந்து கொள்ளும் ஆற்றல் அறிவுடையவர்களுக்கு உண்டு. ஆகையால் அவர்கள் நடுங்கும் படியாக வரும் துன்பங்களென்று எதுவுமில்லை.

                                                            💘💘💘💘💘


காமத்துப்பால்: களவியல்: அதிகாரம்: அலர் அறிவுறுத்தல்: 
குறள் எண்:1147

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்

நம் காதல் மேலும் மேலும் வளர்வதற்கு இந்த ஊரார் பேசும் வம்புப் பேச்சும், தூற்றலும் உரமாகவும், என் தாயின் கண்டிப்புடன் சொல்லும் கடுமையான சொற்கள் நீராகவும் பயன்படுகிறது.

                                                            💘💘💘💘💘


அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: மெய்யுணர்தல்: 
குறள் எண்: 359

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

நாம் பற்றியுள்ள அல்லது சார்புள்ள பொருள்களால்தான் துன்பங்கள் வருகின்றன. பற்றியுள்ள ஒவ்வொன்றையும் விடும்போது அப்பொருட்களினால் வரும் துன்பங்கள் நம் உணர்வினை அழிக்காமல் நம்மை மெய்யுணர்வோடு வாழ வழி வகுக்கும்.

                                                            💘💘💘💘💘


பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: புல்லறிவாண்மை: 
குறள் எண்: 848

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்

அறிவில்லாதவனிடம் என்னதான் சொன்னாலும் அடுத்தவர் பேச்சைக் கேட்கமாட்டான். தானாகவும் அறிந்து கொள்ள முயற்சி செய்ய மாட்டான். இப்படிப்பட்ட நிலை அறிவில்லாதவனுக்கு அவன் உயிர் போகும் வரை அவனை விட்டு விலகாத நோய் போலத்தான் ஆகும்.

                                                            💘💘💘💘💘


பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: மருந்து: 
குறள் எண்: 946

இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்

குறைவான அளவோடு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைத்து நிற்பது போல அளவில்லாமல் எதையும் உண்பவனிடத்தில் நோய் நிலைத்து நிற்கும்.

                                                            💘💘💘💘💘


அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: மெய்யுணர்தல்: 
குறள் எண்: 360

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்

விருப்பு, வெறுப்பு, மயக்கம் அல்லது அறியாமை இம்மூன்றின் உண்மைத் தன்மையறிந்து அவைகளை விட்டொழித்துவிட்டால் இவைகளினால் வரும் துன்பங்கள் நம்மை நெருங்காது.

                                                            💘💘💘💘💘

Search This Blog