Search This Blog

Tuesday, May 3, 2022

திருக்குறளில் உலகம்

 திருக்குறளில்

உலகம்


அறத்துப்பால்: பாயிரவியல்: அதிகாரம்: நீத்தார் பெருமை:
குறள் எண்: 23

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

வாழ்க்கையின் இருவேறு நிலைகளான பிறப்பு, இறப்பு, ஆகியவற்றின் உண்மைத் தத்துவப் பொருளை ஆராய்ந்தறிந்து எல்லா சுக துக்கங்களையும் சமமாகப் பாவித்துத் துறவறம் மேற்கொண்டவர்களின் பெருமையை உலகம் போற்றும்.
🌍🌍🌍🌍🌍

அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: புகழ்: 
குறள் எண்: 234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு

எவரொருவர் பிறருக்குப் பயன்படும் பெருவாழ்வு வாழ்ந்து நிலத்தின் எல்லைகளையெல்லாம் கடந்து பெரும்புகழ் பெற்றிருக்கின்றாரோ அவரைத் தவிர மற்ற அறிஞர்களையும், கற்றறிந்த புலவர்களையும் தேவர் உலகம் கூடப் போற்றாது.

🌍🌍🌍🌍🌍

அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: அருளுடைமை: 
குறள் எண்: 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

இருளைப் போல துன்பம் நிறைந்த இந்த உலகில் அருள் நிறைந்த நெஞ்சமுடையவர்கள் உழன்று துன்பப்படுவதில்லை.

🌍🌍🌍🌍🌍

அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: கூடா ஒழுக்கம்: 
குறள் எண்: 280

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்

உலகத்தோர் அனைவராலும் ஏற்றுக்கொண்ட தீய செயல்களைச் செய்யாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கத்திற்கு அடையாளம். அதைவிடுத்து மற்றவர்களை ஏமாற்ற துறவிபோல் சடாமுடி வளர்த்துக் கொள்வதும் அல்லது முழுவதும் மொட்டையடித்துக் கொள்வதும் ஒரு ஏமாற்று வித்தையாகும்.

                                                                🌍🌍🌍🌍🌍

அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: கள்ளாமை: 
குறள் எண்: 290

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

பிறர் பொருளைத் திருடி வாழ்பவர்களை அவர்களது உயிர் கூட வெறுக்கும். திருடுவதை மனசாலும் நினைக்காமல் வாழ்பவர்களை மண்ணுலகில் மட்டுமல்ல விண்ணுலகில் உள்ளவர்கள் கூட வெறுக்க மாட்டார்கள்.

🌍🌍🌍🌍🌍

அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: நிலையாமை: 
குறள் எண்: 336

நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு

வாழ்க்கையின் நிலையாமையில் நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லாமல் போனான் என்ற மனித வாழ்க்கையின் நிலையற்ற நிலையைப் பறைசாற்றிப் பெருமையுடன் சுழல்கிறது இவ்வுலகம்.


🌍🌍🌍🌍🌍

அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: துறவு: 
குறள் எண்: 346

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்

நான், எனது என்ற ஆணவப் போக்கை எவன் ஒருவன் அறவே விட்டொழித்து வாழ்கிகிறானோ அவனுக்கு எல்லாப் புகழும் வந்து சேரும்.

🌍🌍🌍🌍🌍

அறத்துப்பால்: ஊழியல்: அதிகாரம்: ஊழ்: 
குறள் எண்: 374

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

உலக இயக்கத்தில் இயல்பாக அதன் தன்மை இரண்டு வகைப்படும். செல்வம் நிறைந்த நிலை ஒன்று, மற்றொன்று அறிவு தெளிந்த நிலை. இப்படி இருவேறு வகைப்பட்ட நிலையில் உலகம் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

                                                           🌍🌍🌍🌍🌍                                                                                                            
பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: இறைமாட்சி: 
குறள் எண்: 387

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

தான் கூறுபவைகளில் இனிமையும், பிறருக்குக் கொடுத்துக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசாங்கத்திற்கு அது எண்ணியபடி எல்லாப் பெருமைகளும் இவ்வுலகத்தில் கிடைக்கும்.

🌍🌍🌍🌍🌍

பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: கண்ணோட்டம்: 
குறள் எண்: 571

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு

இரக்க குணம் என்ற மிகப்பெரிய அழகுணர்ச்சியுடன் கூடிய நல்ல குணம் இன்னும் இவ்வுலகில் நிறைந்திருப்பதால்தான் உலகம் இன்னும் நிலை பெற்று உயிர்களைக் காத்துக் கொண்டிருக்கிறது.


🌍🌍🌍🌍🌍

பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: கண்ணோட்டம்: 
குறள் எண்: 578

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு

செய்கின்ற எல்லாச் செயல்களிலும் குறையில்லாமல், கடமை தவறாமல் இரக்கம் காட்ட வேண்டிய இடத்திலும், நேரத்திலும், இரக்கத்துடன் மற்றவர்களுக்கு உதவும் மக்களுக்காக உரியது இந்த உலகம்.

🌍🌍🌍🌍🌍

பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: வினைத்திட்பம்: 
குறள் எண்: 670

எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு

எப்படிப்பட்ட உறுதியுடையவராக இருந்தாலும் செய்யும் தொழிலில் உறுதியுடன் இல்லாதவர்களை இந்த உலகம் மதிக்காது.

🌍🌍🌍🌍🌍

பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: புல்லறிவாண்மை: 
குறள் எண்: 841

அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு

நம் வாழ்க்கையில் இல்லாததென்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை இந்த உலகம் பெரிதாக எடுத்துக் கொள்ளாது. ஆனால் அறியாமை அல்லது அறிவுப் பஞ்சம்தான் இல்லாதவற்றிலெல்லாம் கொடுமையான இல்லாமையாகும்.
🌍🌍🌍🌍🌍

பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்: 
குறள் எண்: 874

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மை வேண்டும். அத்தகைய பண்பைப் பெற்றவர்களால்தான் உலகில் நன்மைகள் விளையும்.
🌍🌍🌍🌍🌍

பொருட்பால்: ஒழிபியல்: அதிகாரம்: பண்புடமை: 
குறள் எண்: 994

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு

நீதியுடனும், நல்ல அறவழியிலும் பிறருக்குப் பயன்படும் உயரிய வாழ்க்கையை வாழும் பெரியோர்களின் பண்பை இந்த உலகம் பாராட்டும்.

🌍🌍🌍🌍🌍

பொருட்பால்: ஒழிபியல்: அதிகாரம்: நாணுடைமை 
குறள் எண்:1015:

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு

எவர் ஒருவர் தன் மேல் வந்த பழிக்காக மட்டுமல்லாமல் அவரைச் சார்ந்தவர்களுக்கும் பழி நேர்ந்தால் வருந்தி நாணம் அல்லது வருத்தப்படுகிறார்களோ அப்படிப்பட்டவர்களை நாணம் என்னும் உயர்ந்த பண்பிற்கு உதாரணமாக வாழ்பவரென்று உலகம் போற்றும்.

🌍🌍🌍🌍🌍




Search This Blog